தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல் - Daily Dhuniya

Breaking

Friday, October 1, 2021

தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 % இட ஒதுக்கீடு: தமிழக அமைச்சரவை ஒப்புதல்

சென்னை: அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு, தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கவும், அதற்காக நடப்பு சட்டசபை தொடரில் சட்ட முன் வடிவு தாக்கல் செய்யவும், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்தது. இதனால், அரசு பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி படிப்பதற்கான தடையாக உள்ள காரணங்கள் என்ன என்பது குறித்து ஆய்வு செய்யவும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை கண்டறிந்து உரிய தீர்வுகள், பரிந்துரைகளை செய்யவும் ஓய்வு பெற்ற டில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டு அறிக்கை பெறப்பட்டது. அந்த கமிஷன் பரிந்துரைகளை ஏற்று, அதனை செயல்படுத்தும் விதமாக, மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கியதை போல், அரசு பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஏனைய தொழிற்கல்வி படிப்புகளில் 7.5 சதவீதம் ஒதுக்கீடு வழங்கும் வகை செய்யும் சட்ட முன்வடிவை நடப்பு சட்டசபை கூட்டத்தொடரில் அறிமுகம் செய்வது என, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment