கண்டிப்பான பெற்றோரா நீங்கள்? உங்களுக்கான பதிவு தான் இது.! - Daily Dhuniya

Breaking

Friday, October 1, 2021

கண்டிப்பான பெற்றோரா நீங்கள்? உங்களுக்கான பதிவு தான் இது.!

நாம் சொல்வதை மட்டும் குழந்தைகள் கேட்டு பின்பற்ற வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு, பெரும்பாலான பெற்றோரிடம் உண்டு. சில பெற்றோர் செயல்பாடுகளிலும் வார்த்தைகளிலும் அதீத வேறுபாடுகள் இருப்பதால், குழந்தைகள் மன உளைச்சலுக்கு ஆளாவதாக, உளவியல் துறையினர் எச்சரிக்கின்றனர்.ஆன்-லைன் வகுப்புகள் மற்றும் முழுநேரம் வீடுகளில் இருக்கும் பிள்ளைகளால், பெற்றோர் குறிப்பாக வீடுகளிலேயே இருக்கும் தாய்மார்கள் அதிகம் மனஅழுத்தத்தில் உள்ளனர் என்பதில் சந்தேகம் இல்லை. இதன் காரணமாகவே, சமீபத்தில் பெற்றோர் குழந்தைகள் மீது வழக்கத்தை காட்டிலும் கூடுதல் கண்டிப்பை காட்டுவதை காண முடிகிறது. இக்கண்டிப்பு, பிள்ளைகளின் செயல்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்துகிறது என்கின்றனர்.உளவியல் நிபுணர் சுமித்தா சாலினியிடம் பேசியபோது...கடந்த இரு ஆண்டுகள் குழந்தைகள் மட்டுமின்றி, பெற்றோர், முதியோர் என வயது வித்தியாசமின்றி அனைவரும் சூழல், பொருளாதாரம், கல்வி, வேலை என பல விதங்களில் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். வெளியிடங்களுக்குச் செல்ல முடியாமல் நான்கு சுவர் அல்லது நமது தெருவுக்குள் மட்டும் வட்ட மிட்டு, பெற்றோரின் கண்டிப்பை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்கும் பிஞ்சுகளின் நிலை வருத்தத்துக்கு உரியது.முழு நேரமும் பிள்ளைகளை கவனித்துக் கொண்டிருப்பதும் கஷ்டம். அதற்காக, முழுமையான அதிகாரத்தை அவர்கள் மீது செலுத்துவது சரியல்ல.சமீபத்தில், ஐந்து வயது குழந்தை அதிகமாக பொய் பேசுவதாக பெற்றோர் அழைத்து வந்தனர். 'சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் பொய் சொல்கிறாள்.
அடித்தாலும் வாங்கிக்கொண்டு முறைத்துக்கொண்டு நிற்கிறாள்; பெரியவளானால் என்ன செய்வாளோ' என, அச்சிறுமியின் தாய் ஆதங்கத்துடன் கூறினார்.அக்குழந்தையுடன் பழகவே இரு நாட்கள் தேவைப்பட்டது. எதற்கும் பதில் பேசாத குழந்தை இரு நாட்கள் கழித்து, என்னுடன் பேசத்துவங்கியது. ஏன் பொய் சொல்கிறாய் என்ற கேள்விக்கு 'உண்மையைச் சொன்னா அடிப்பாங்க'ன்னு, அப்பாவியாய் பதில் கூறியது. இதை அனைத்து பெற்றோரும் உணர வேண்டும்.குழந்தைகள் தவறு செய்யும்போது, கண்டிப்பு அவசியம். அதிகாரத்துடன் தொடர்ந்து தண்டிப்பது பொய் சொல்ல துாண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தவறு செய்து உண்மையை கூறும் குழந்தைகளை நட்புடன் அணுகி, அதன் விளைவுகளை விளக்க வேண்டும். நமது மன அழுத்தங்களை பிள்ளைகளிடம் காண்பிப்பது தவறான போக்கு, என்றார்.நெருக்கம் அவசியம்காலை, 8:30க்கு துவங்கும் வகுப்புக்கு, குழந்தைகளை, 8:00க்கு எழுப்பி, அவசர அவசரமாக தயார்படுத்துவதால், காலைப்பொழுதிலேயே, மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர்.உணவு உட்கொள்ளும்போதும், மொபைல் போனை காண்பித்து ஊட்டிவிடுவது, பெற்றோர் சாப்பிடும்போது மொபைல் போன் கொடுத்து தனியாக அமர வைப்பது, அவர்களுடனான நெருக்கத்தை குறைத்து விடுகிறது. முடிந்தவரை, அனைவரும் ஒன்றாக அமர்ந்து, உரையாடிக் கொண்டே சாப்பிட வேண்டும். இரவு, 9:00 மணிக்கு குழந்தைகளை படுக்கையில் போட்டு விட்டு, மொபைல் போனையோ, 'டிவி' சீரியலோ பார்க்கும் தாய்மார்களே அதிகம். அவ்வாறு செய்யாமல், பிள்ளைகளின் வயதுக்கு ஏற்ப கதைகள் கூறியும், சொந்த விசயங்களை பகிர்ந்தும், வளர்ந்த பிள்ளைகளிடம் அன்றைய தினம் குறித்தும் பகிர்ந்து கொண்டால், அவர்களும் நம்மிடம் வெளிப்படையாக பேசுவர். அதிக கண்டிப்புடன் வளர்கப்படும் குழந்தைகளின் சுயசிந்தனை பாதிக்கப்படுகிறது என்பதை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment