அரியர் மாணவர்களுக்கு அடுத்த சிக்கல்: மீண்டும் கிடுக்கிப்பிடி போட்டது வேளாண் பல்கலை - Daily Dhuniya

Breaking

Sunday, December 19, 2021

அரியர் மாணவர்களுக்கு அடுத்த சிக்கல்: மீண்டும் கிடுக்கிப்பிடி போட்டது வேளாண் பல்கலை

தமிழ்நாடு வேளாண் பல்கலை 'அரியர்' மாணவர்களுக்கு அடுத்தடுத்து சோதனைகள் வந்துகொண்டே இருக்கின்றன. ஒரே நேரத்தில் அரியர் தேர்வு, மேற்படிப்பு நுழைவுத்தேர்வு, கிராமப்புற பணி அனுபவ திட்டம் ஆகியவற்றை அறிவித்து 'ஷாக்' கொடுத்திருப்பதால் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வேளாண் பல்கலையில் அரியர் தேர்வு எழுதிய மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதால் பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை என, அறிவிக்கப்பட்டது. மாணவர்களின் போராட்டங்களுக்குப்பின் மறுதேர்வுக்கான கட்டணத்தை பல்கலை நிர்வாகம் குறைத்ததுடன், வரும், 22ம் தேதி முதல் மறுதேர்வுகள் நடக்குமென்றும் அறிவித்தது.அன்றைய தினமே வேளாண் மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வும் நடக்கவுள்ளது. இதனால், 'அரியர்' மாணவர்கள், மேற்படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தவிர, 2018ம் ஆண்டு மாணவர்கள் 'ராவே' எனும், கிராமப்புறங்களில் வேளாண் பணி அனுபவம் பெறுவதற்கான திட்டமும் வரும், 20ம் தேதி முதல் துவங்க உள்ளது. பிரதமரின் இத்திட்டத்தில் இணையும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும். இத்திட்டத்தின்படி, 100 சதவீத வருகைப்பதிவு இருந்தால் மட்டுமே தேர்வு எழுத முடியும் என்ற விதிகள் உள்ளதால் மறுதேர்வு எழுதுவோருக்கு இது சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. வேளாண் பல்கலை டீன் கல்யாணசுந்தரம் கூறியதாவது:மேற்படிப்புக்கான நுழைவுத் தேர்வு குறித்து புகார் தெரிவித்தால் மாற்றியமைக்க வாய்ப்புள்ளது; இதுகுறித்து மாணவர்கள்தான் தெரிவிக்க வேண்டும். 'ராவே' திட்ட விதிகள், பிரதமரின் சிறப்பு திட்டத்தின் கீழ் வருகின்றன. திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு நிதி வழங்கப்படுகிறது; 100 சதவீதம் வருகைப்பதிவு கட்டாயம். மாணவர்கள் விடுப்பு எடுக்க முடியாது; விதிகளை மாற்ற முடியாது.ஆனால் மாணவர்கள், இத்திட்டத்தில் இணைந்து கொண்டே அரியர் தேர்வு எழுத வேண்டும் என கோருகின்றனர்; அதற்கு வாய்ப்பில்லை. தேர்வு முறைகேடு குறித்து மாணவர்கள் சிலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதற்கான வீடியோவை காண்பிக்க வேண்டும் என, நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் 'பெற்றோர், ஆசிரியர்கள் அடங்கிய கமிட்டிக்கு முன் அந்த வீடியோவை மாணவர்கள் பார்க்க வேண்டும். மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டிருந்தால் பல்கலை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கலாம்'என்றும் உத்தரவிட்டுள்ளது. பல்கலை விதிகளின்படி முறைகேட்டில் ஈடுபட்டால் இரு செமஸ்டர் தேர்வு எழுத முடியாது. ஓராண்டுக்கு கல்லுாரிக்கு செல்ல முடியாது. எழுதிய அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி அடையவில்லை என அறிவிக்கப்படும். நீதிமன்ற உத்தரவுப்படியே பல்கலை நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. நீதிமன்ற உத்தரவை பெற்று வந்த மாணவர்கள் தேர்வு எழுத சம்மதம் தெரிவித்துள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment