அனைத்து பள்ளிகளிலும் மதிய உணவு இடைவேளையை ஒரு மணி நேரமாக அதிகரிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:
தமிழக மாணவர்களிடம் நுண்ணூட்டச் சத்து குறைபாடு பெரும் குறையாக உருவெடுத்துள்ளது. பள்ளிகளில் படிக்கும் வயதில் உள்ள மாணவ, மாணவிகள் 46 சதவீதத்தினருக்கு சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றன ஆய்வு முடிவுகள்.
அதேபோல், இளம் வயதில் பலரும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த இரு வகையான குறைபாடுகளும் உணவுப்பழக்கம் செம்மையாக இல்லாததால்தான் ஏற்படுகின்றன.
அரசு பள்ளிகளில் மதிய உணவு இடைவேளை சராசரியாக 40 நிமிடங்களாகவும், தனியார் பள்ளிகளில் 30 நிமிடங்களாகவும் குறைக்கப்பட்டுவிட்டது. அதனால், பெரும்பான்மையான மாணவ, மாணவிகள் தங்கள் மதிய உணவின் ஒரு பகுதியை மட்டுமே சாப்பிடுகின்றனர். பலர் உணவு சாப்பிடாமல் பட்டினியாக வகுப்புக்குசெல்கின்றனர். பெரும்பான்மையான குழந்தைகளின் சத்துக் குறைவுக்கு இதுவே காரணம்.
முதல் நடவடிக்கையாக தமிழகத்தில் அனைத்துப் பள்ளிகளிலும் குறைந்தது ஒரு மணி நேரம் மதியஉணவு இடைவேளை விடப்படுவதும், ஒரு நாளுக்கு ஒரு பாடவேளையாவது விளையாட்டு, உடற்பயிற்சிக்கு ஒதுக்கப்படுவதையும் அரசும், பள்ளி நிர்வாகங்களும் உறுதி செய்ய வேண்டும்.
வாரத்துக்கு ஒரு பாட வேளையாவது நுண்ணூட்டச் சத்து மற்றும் ஆரோக்கியமான உணவுமுறைகள் குறித்து மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு உடனடி உணவுகளை தயாரித்து வழங்காமல் காய்கறிகள், பருப்பு, சிறுதானியங்கள் நிறைந்த உணவுகளை கொடுத்து அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment