மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்? - Daily Dhuniya

Breaking

Saturday, April 30, 2022

மாணவர்களுக்கு படிப்பில் ஆர்வம் ஏற்பட என்ன செய்ய வேண்டும்?

(பெரும்பாலான) பெற்றோர்கள் பார்வையில், படிப்பு என்பது என்ன?

எதிர்காலத்தை நிர்ணயம் செய்யும் பாதை (நல்ல வேலை கிடைக்கும்)

குடும்ப கௌரவம் - (மகன்/ள் தந்தைக்கு ஆற்றும் உதவி)

நம் செலவுகளைக் குறைக்கும் வாய்ப்பு (நல்லா கை நிறைய சம்பாதிச்சா நம்மை நம்பியிருக்கும் தேவை இருக்காது)

சின்ன வயதில் இருந்தே கஷ்டப்பட்டால் தான் முன்னேற முடியும்

நானும் இந்த வயதில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு இவர்களின் உலகம் தெரியும். (பெரும்பாலான) ஆசிரிய ஆசிரியைகளின் பார்வையில், மாண(வி/வர்)கள் என்பவர்கள் யார்?

ஒரே அளவான கொள்ளளவு கொண்ட தகவல் தேக்கிகள் (பரீட்சை வரை)

அனுபவம் அற்றவர்கள்

படிப்பைத் தவிர வேறு எந்த தேவையும் இவர்களுக்கு இருக்கக் கூடாது

நானும் இந்த வயதில் இருந்து வந்திருக்கிறேன். எனக்கு இவர்களின் உலகம் தெரியும்

(பெரும்பாலான) மாண(வி/வர்)கள் பார்வையில் கல்வி மற்றும் பெற்றோர்/ஆசிரிய/ஆசிரியைகள் பற்றிய கருத்து என்ன?

நிர்பந்தம்

விளையாட்டு நேரத்தை திருடிக் கொள்ளும் ஒரு விஷயம்

பரீட்சை வரும்போது மட்டும் படித்தால் போதாதா?

எப்படி மாணவிகள் எப்போதுமே நம்மை முந்தி விடுகிறார்கள் என்ற புதிர் (கேள்வி மாணவ மாணவியர் அனைவர்க்கும் என்று புரிகிறது. ஆனால், இந்த வரி மாணவர்களுக்கானது :)

பெற்றோர் / ஆசிரிய ஆசிரியைகளுக்கு நம் உலகம் பற்றி ஒன்றுமே தெரியாது. இந்த முரண்பாடுகளின் சங்கமம் தான் குழந்தைகளின் கல்வியும், அதைச் சுற்றியுள்ள சமூக அமைப்புகளும். இதைத் தாண்டி, இன்றைய நிலையில், எண்ணத்தை சிதறடிக்க நம்மைச் சுற்றியுள்ள சாதனங்களும், நிகழ்வுகளும், ஒரு 10/15 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட மிக மிக அதிகம் இன்று.

இந்தப் புரிதலில் இருந்து தான், நாம் ஆரம்பிக்க வேண்டியிருக்கிறது. மேலும், மாணவன் மனநிலை என் அனுபவங்களாக நினைவு இருக்கிறது. அதே நேரம், என் அனுபவங்கள் அல்ல என் குழந்தைகளினுடையதும் என்பதையும், அவர்கள் உலகமும் அனுபவங்களும் வேறு என்று புரிந்து கொண்டு பார்ப்பதும் தான் வழி.

என் பையனின் வகுப்பிற்கு ஒருமுறை சென்றிருந்த போது, அந்த அறையில் ஒரு போஸ்டர். அதில் உள்ள வாசகம் இது.
“Everybody is a genius. If you judge a fish by its ability to climb a tree, it will live its whole life believing that it is stupid”.
என் குழந்தை மீனாக இருந்தால், அது நீந்தும் அழகை ரசிப்பதை விட்டு விட்டு, புது நீர் நிலைகளை காட்டுவதை விடுத்து, நீ ஏன் மரம் ஏற மாட்டேன் என்கிறாய் என்றால் அது என்ன செய்யும்?

இதில் இரண்டு நிலை உண்டு. லட்சியவாத நிலை, எதார்த்த நிலை.

லட்சியவாத நிலையில், மாணவர்களுக்கு என்ன பிடிக்குமோ அதை செய்வதற்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்பதாக பார்க்க வேண்டும். ஆனால், எதார்த்த நிலை என்பது அப்படி முற்றிலுமாக விட முடிவதில்லை. சில நேரம் கண்டிப்புடன் சில வழிகளில் அவர்களை நெறிப்படுத்த வேண்டி இருக்கிறது.

இப்பொது, ஆர்வம் ஏன் குறைகிறது என்று பார்ப்பது அவசியம். ஒரு தனி மாணவனை நோக்கிய பார்வை இது. மாணவர்களின் அருகாமை உலகம் என்பது அவர்களின் தோழர் தோழியர் தான். அந்த நட்பு வட்டம் என்பது ஒரு மாணவருக்கு எவ்வளவு ஆரோக்யமாக இருக்கிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு, அவர்களின் அன்றாட நடைமுறைகளும் பழக்க வழக்கங்களும் இருக்கிறது. இந்த நட்பு வட்டத்தைப் பற்றி புரிந்து கொள்வது அவசியம். ஒரு மாணவனின் நெருங்கிய நண்பன் / நண்பர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் உள்ளவனாக இருந்தால், அதில் இவனுக்கும் ஈடுபாடு வருவதென்பது இயல்பு.

பாடங்கள் கடினமாக இருந்தாலோ, சரிவர புரியவில்லை என்றாலோ, ஒருவித பயமும் ஒவ்வாமையும் ஏற்படும் போது ஆர்வம் போகலாம்.

ஆசிரிய ஆசிரியைகள், ஒரு மாணவரின் தன்னம்பிக்கையை சிதைக்கும் போது, ஆர்வம் போகலாம். எதற்குப் பார்த்தாலும் குறை சொல்லும் ஆசிரியர்களை நான் பார்த்திருக்கிறேன். அதற்குத் தான் மேலே ஒவ்வொருவர் பார்வையில் பிறர் எப்படி அணுகப்படுகிறார்கள் என்று சொன்னேன்.

பெற்றோர்கள் எதாவது ஒரு விருப்பத்தை நிறைவேற்றாமல் போனால், பழி வாங்குவதாக நினைத்து சரியாக படிக்காமல் இருக்கலாம்.

சரி, எப்படி ஆர்வத்தை ஏற்படுத்துவது? முதலில், மேலே சொன்னது போல, ஆர்வம் குறைந்ததற்கான காரணத்தை, பேசி புரிந்து கொள்வது அவசியம். இது தான் 75% பங்கு வேலை. புரிந்து கொண்டதற்குப் பிறகு, எல்லா நேரங்களிலும், பெற்றோரே புத்தி சொல்லி மாற்ற முடியாது. ஒரு நல்ல மாற்றதிற்கான ஊக்கம் அவர்களைச் சுற்றியுள்ள யாரிடம் இருந்து வேண்டுமானாலும் வரலாம். பெற்றோராக அப்படி ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமானால் முயலலாம். சில நேரம், மாணவ மாணவியருடன் உரையாடும் முதிர்ச்சி கொண்ட நம் நண்பர்கள், அல்லது உறவினர்களுடன் பேச வைக்கலாம். அறிவுரை நிகழ்ச்சியாக அல்லாமல், இயல்பான உரையாடல்கள் இருக்குமாறு பார்த்துக் கொள்ளலாம். இந்த உரையாடல்கள் சில அடிப்படை மாற்றங்களை ஏற்படுத்தும். இதை உள்வாங்கி அவர்கள் மாற அவகாசம் கொடுக்க வேண்டும். இது 25% வேலை தான். உண்மையாகவே மாணவர்கள் மேல் அக்கறை உள்ள ஒரு ஆசிரியர் அவர்களுக்கு நம்பிக்கையும் ஆர்வத்தையும் ஏற்படுத்த முடியும். அவர்களுக்கு அணுக்கமான ஒரு சூழ்நிலையை ஏற்படுத்தி, நம்பிக்கையை பெற்று விட்டால் போதும். ஒவ்வொரு மனிதனும், தன்னைப் பற்றி கவலைப்படவும், நம்பிக்கையாகவும், அக்கறையாகவும் ஒருவர் இருக்கிறார்கள் என்று உணர்ந்து கொள்ளும் நேரம், அவருக்கு நம்பிக்கையாய் இருக்க விரும்புவது இயல்பு.

No comments:

Post a Comment