நீட் தேர்வு எழுதிய மாணவிக்கு விடைத்தாளை காட்ட உத்தரவு - Daily Dhuniya

Breaking

Tuesday, October 4, 2022

நீட் தேர்வு எழுதிய மாணவிக்கு விடைத்தாளை காட்ட உத்தரவு

நீட் தேர்வு எழுதிய மாணவிக்கு விடைத்தாளை காட்ட உத்தரவு - The student who wrote the NEET exam was ordered to show the answer sheet

மருத்துவ படிப்பில் சேர்வதற்கான 'நீட்' தேர்வை எழுதிய மாணவிக்கு, அசல் விடைத்தாளை காட்டும்படி, தேசிய தேர்வு முகமைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த சிறிஸ்மா விக்டோரியா என்பவர் தாக்கல் செய்த மனு:மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வை எழுதினேன். என் மதிப்பெண்ணை சரிபார்க்க வேண்டியுள்ளது. விடைத்தாள் சரியாக மதிப்பிடப்பட்டு, மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளதா என்பதைப் பார்க்க வேண்டும். அதனால், அசல் விடைத்தாளை வழங்கும்படி, தேசிய தேர்வு முகமைக்கு மனு அனுப்பினேன். அதை பரிசீலித்து, அசல் விடைத்தாளை வழங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர் ஆஜரானார். தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 'அசல் விடைத்தாளை பார்க்க வேண்டும் என்றால், டில்லி, நொய்டாவில் உள்ள தேசிய தேர்வு முகமைக்குச் செல்ல வேண்டும். அங்கு, விடைத்தாள் காட்டப்படும்' என்றார்.இதையடுத்து, நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பிறப்பித்த உத்தரவு:டில்லியில் உள்ள தேசிய தேர்வு முகமைக்குச் செல்ல மனுதாரர் தயாராக உள்ளார். தேதியை உறுதி செய்து, மனுதாரருக்கு தெரிவித்தால், அவர் டில்லி பயணிக்க வசதியாக இருக்கும்.

எனவே, தேசிய தேர்வு முகமை அலுவலகம் வருவதற்கு, 10 நாட்களுக்குள் ஒரு தேதியை உறுதி செய்து, முன்கூட்டி தகவல் தெரிவிக்க வேண்டும். இ - மெயில் வாயிலாகவும், தேர்வு முகமை வழக்கறிஞர் வாயிலாகவும், மனுதாரருக்கு தெரியப்படுத்த வேண்டும். தேதி தெரிவிக்கப்பட்ட பின், அந்த தேதி, நேரத்தில், தேசிய தேர்வு முகமைக்கு செல்லலாம். அங்கு, அசல் விடைத்தாளை மனுதாரருக்கு காட்ட வேண்டும்.இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

2 comments:

  1. Seniyarity anru ponatho antra Ella truthum,.......

    ReplyDelete
  2. Seniyaritla poda what problem?

    ReplyDelete