'ஏகலைவா பள்ளி' ரூ.17 கோடியில் தயார்: பழங்குடி மாணவர்களுக்கு அழைப்பு - Daily Dhuniya

Breaking

Sunday, June 19, 2022

'ஏகலைவா பள்ளி' ரூ.17 கோடியில் தயார்: பழங்குடி மாணவர்களுக்கு அழைப்பு

இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் பயனடைவதற்காக, 17 கோடி ரூபாயில், மத்திய அரசின் 'ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி', வண்டலுார் அருகே கட்டப்பட்டு உள்ளது. சகல வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள இப்பள்ளியில் இருளர் மற்றும் பழங்குடியின மாணவர்கள் தங்கி சேர்ந்து படித்து, பயனடைய அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.தமிழகத்தில் பழங்குடிஇனத்தைச் சேர்ந்த குழந்தைகள், கல்வி தரத்தில் மேம்படுவதற்காக, 'ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகள்' துவக்க, மத்திய அரசு முடிவு செய்தது.

தமிழகத்தில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பத்துார், ஊட்டி ஆகிய மாவட்டங்களில், அரசு 'ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிகள்' நிறுவப்பட்டு, ஆங்கில வழியில் பாடம் பயிற்றுவிக்கப் படுகிறது.சேலம் மாவட்டத்தில் மட்டும், இரண்டு பள்ளிகள் உள்ளன. பழங்குடியின மாணவர்கள் அங்கு, ஆர்வமாக படித்து வருகின்றனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்டத்தில், பட்டிபுலம் பகுதியில், ஆதிதிராவிடர் நலத்துறை உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், ஒரு கட்டடத்தில் மட்டும், அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளி, 2018ல் துவக்கப்பட்டது.இந்த ஏகலைவா பள்ளியில், ஒரு தலைமையாசிரியர் உட்பட ஏழு ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். குறைந்த மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டு, நான்கு ஆண்டுகளில் 167 மாணவ - மாணவியர் பயில்கின்றனர். இந்த கல்வியாண்டில் 40 மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளனர்.கடந்த 2021 - -22ம் ஆண்டு, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. பிளஸ் 1 மாணவர்கள் பயில்கின்றனர்.

இப்பள்ளிக்கு தனியாக கட்டடம் கட்ட வேண்டும் என, மத்திய அரசு முடிவு செய்தது.அதை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் தாலுகா, குமிழி ஊராட்சியில், 15 ஏக்கர் நிலத்தை, வருவாய்த் துறையினர் ஒதுக்கீடு செய்தனர்.பின், பள்ளி கட்டடம், மாணவர்கள் விடுதிகள் கட்ட, இரண்டு ஆண்டுகளுக்கு முன், 12 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கியது. பணிகள் துவங்கிய நிலையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கட்டுமான பணிகள் மந்தமாகின.

தற்போது, அனைத்து கட்டடங்களும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மேற்கண்ட பள்ளி திறப்பதற்கு தயார் நிலையில் உள்ளது.நடப்பு 2022 - -23ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை, பழங்குடியின மாணவர்களுக்கு 90 சதவீத இடங்கள். ஆண் - 216; பெண்கள் - 216 என, மொத்தம் 432 பேர் சேரலாம்.

ஒதுக்கீடு

மற்ற பிரிவினர்களுக்கு 10 சதவீத இடங்கள். ஆண்கள் - 24; பெண்கள் - 24 என, மொத்தம் 48 மாணவர்களுக்கு சேர்க்கை நடந்து வருகிறது. தமிழகம் முழுதும் இருந்து மாணவர்கள் வந்து சேரலாம்.இருளர் மற்றும் பழங்குடியின பிரிவில் உள்ள குழந்தைகளை சேர்ப்பதற்கு, உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றம் தனியார் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோர் முயற்சித்து வருகின்றனர்.இந்நிலையில், அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிட பள்ளிக்கு, கூடுதல் மாணவி விடுதி மற்றும் பள்ளிக்கு சுற்றுச்சுவர் உள்ளிட்ட வசதிகள் செய்ய, 5 கோடி ரூபாயை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. தனித்தனி விடுதி

ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வண்டலுார் அடுத்த, குமிழி பகுதியில், அரசு ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளிக்கு புதிய கட்டடம் மற்றும் மாணவ - மாணவியருக்கு, தனித்தனியாக விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. மின் இணைப்புக்கு மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளோம். கிடைத்தவுடன், பள்ளி கட்டடம் மற்றும் விடுதி திறக்கப்பட்டு, இந்தாண்டுக்கான வகுப்புகள் துவக்கப்படும். இதற்கு பின், குமிழியில் மட்டும் 'ஏகலைவா மாதிரி உண்டு உறைவிடப் பள்ளி' செயல்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.

பள்ளியில் ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகள்

மாணவ - மாணவியருக்கு தனித்தனி விடுதி; அனைத்து மாணவர்களுக்கும் விடுதியில் இடம் உண்டு

தனித்தனி கழிப்பறைகள், விளையாட்டு திடல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்

தங்கும் இடம், உணவு, பாடப்புத்தகம், நோட்டுப் புத்தகம், சீருடைகள், காலணிகள், டை, பெல்ட், துணி சோப்பு, குளியில் சோப்பு, தேங்காய் எண்ணெய், டூத் - பேஸ்ட் வழங்கப்படும்

நுாலகம் மற்றும் 'ஸ்மார்ட்' வகுப்பு மூலம் கல்விl அனைத்து வசதியுடன் கூடிய விளையாட்டு மைதானம், உடற்பயிற்சி

நாட்டு நடப்பு அறிய விடுதியில் 'எல்.இ.டி., - டிவி' வசதி

மாணவர்கள் தங்குவதற்கு இரண்டு அடுக்கு கட்டில், மெத்தை, போர்வை, தலையணை.

மாவட்ட மற்றும் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வைக்க சிறப்பு பயிற்சி 'நீட்' உள்ளிட்ட அனைத்து திறனறித்தேர்வுகள் மற்றும் போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி.

No comments:

Post a Comment