IMPS முறையில் பண பரிவர்த்தனை ரூ.2 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Friday, October 8, 2021

IMPS முறையில் பண பரிவர்த்தனை ரூ.2 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிப்பு; ரிசர்வ் வங்கி அறிவிப்பு

வங்கிகளில் பணப்பரிமாற்றத்துக்காக வழங்கப்படும் சேவைகளில் ஒன்றான, ஐ.எம்.பி.எஸ்., முறையில் பணத்தை அனுப்புவதற்கான தினசரி வரம்பு, 2 லட்சத்திலிருந்து 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை தொடர்பான கூட்டம், கடந்த மூன்று நாட்களாக மும்பையில் நடந்து வந்தது. நிறைவு நாளான நேற்று பல முக்கிய அறிவிப்புகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது போன்ற அறிவிப்புகளுடன், ஒரு மகிழ்ச்சி அளிக்கும் அறிவிப்பும் வெளியானது.

மூன்று முறைகள்

வங்கிகளில் 'ஆன்லைன்' வாயிலாக வாடிக்கையாளர்கள் பணம் அனுப்புவதற்கு, மூன்று முக்கியமான முறைகள் உள்ளன. ஆர்.டி.ஜி.எஸ்., - ஐ.எம்.பி.எஸ்., மற்றும் 'நெப்ட்' என மூன்று முறைகள் உள்ளன. இவற்றில் நாம் விரும்பும் வங்கி கணக்குக்கு உடனடியாக பணத்தை அனுப்ப, ஐ.எம்.பி.எஸ்., எனப்படும் 'இம்மீடியட் பேமன்ட் சர்வீஸ்' என்ற முறையே பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது.

இதனால் நாம் யாருக்கு பணம் அனுப்புகிறோமோ அவர்கள் பணத்தை பெற்றுக்கொள்ள காத்திருக்க வேண்டியதில்லை. நாம் அனுப்பும் தொகை உடனடியாக அவர்களது கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும். இந்த சேவையின் வாயிலாக 24 மணி நேரமும் பணத்தை உடனடியாக அனுப்ப முடியும். அதுமட்டுமின்றி, வங்கி விடுமுறை நாட்களிலும் கூட இந்த முறையில் பணம் அனுப்ப முடியும். இந்த ஐ.எம்.பி.எஸ்., சேவையை மொபைல் பேங்கிங் செயலி, இன்டர்நெட் பேங்கிங், வங்கி கிளைகள், ஏ.டி.எம்., ஆகியவற்றின் வாயிலாக வாடிக்கையாளர்கள் பெற முடியும். அதிருப்தி

இத்தகைய விரைவான சேவை வழங்கப்பட்டு வந்தாலும், நாள் ஒன்றுக்கு 2 லட்சம் ரூபாய் வரை மட்டுமே அனுப்ப முடியும் என்ற வரம்பு இருந்தது; இது, பலருக்கும் அதிருப்தி அளிப்பதாகவே இருந்து வந்தது. குறிப்பாக வணிகர்களுக்கு ஐ.எம்.பி.எஸ்., முறையில் உடனடியாக பணம் அனுப்ப வசதி கிடைத்தபோதிலும், அதன் வரம்பு போதுமானதாக இல்லாமல் சிரமத்தை சந்தித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்றைய பணக்கொள்கை குழு கூட்டத்தின் முடிவில், ஐ.எம்.பி.எஸ்., முறையிலாக பணம் அனுப்புவதற்கான வரம்பு, நாள் ஒன்றுக்கு 5 லட்சம் ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது, வர்த்தகர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

No comments:

Post a Comment