ஆன்லைன் வாயிலாக, நேரடியாக வகுப்புகளை நடத்தலாம்: ஐகோர்ட் - Daily Dhuniya

Breaking

Saturday, October 23, 2021

ஆன்லைன் வாயிலாக, நேரடியாக வகுப்புகளை நடத்தலாம்: ஐகோர்ட்

சென்னை:'கல்வியை எளிதில் அணுகும் வகையில், ஆன்லைன் வாயிலாகவும், நேரடியாகவும் வகுப்புகளை நடத்தலாம்' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது உயர் நீதிமன்றத்தில், நேர்வழி இயக்கம் அறக்கட்டளை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு: கொரோனா பரவல் காரணமாக, ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்படுகிறது. இதனால், மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். எனவே, 18 வயதுக்கு மேற்பட்ட மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் தடுப்பூசி செலுத்தி, வகுப்புகளை துவங்க உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அமர்வில், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ஸ்ரீசரண் ரங்கராஜன், தமிழக அரசு சார்பில், வழக்கறிஞர் ஆர்.அனிதா உள்ளிட்டோர் ஆஜராகினர்.ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் பெரும்பாலும் தடுப்பூசி செலுத்தி விட்டதாகவும், கல்வி நிறுவனங்கள் திறந்து, வகுப்புகள் துவங்கி விட்டதாகவும், மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப் பட்டு, அனுபவம் ஏற்பட்டுள்ளது. உரிய அனுமதி பெற்று, ஆன்லைன் வாயிலாக மாணவர்கள் பங்கேற்கலாம்.வகுப்புக்கு வருவதற்கு, மாணவர்கள் நிறைய நேரம் பயணிக்க வேண்டியுள்ளது. மாற்றுத் திறனாளிகள், உடல் நலம் சரியில்லாதவர்களின் நிலையை பரிசீலிக்க வேண்டும். நேரடி வகுப்பில், ஆன்லைன் வாயிலாக எந்தெந்த நாட்களில் கலந்து கொள்ளலாம் என்பதற்கான விதிமுறைகளை வகுத்து கொள்ளலாம். பல்கலை மானியக் குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு தாக்கல் செய்த அறிக்கையில், எப்படி ஆன்லைனில் பல வகுப்புகள் நடத்த அனுமதிக்கப்பட்டது என, குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, உறுதியாக இல்லாமல், கல்வியை எளிதில் அணுகும் வகையில், மறுபரிசீலனை செய்யலாம். தற்போது, விழா காலங்கள் பெரும்பாலும் முடிந்து விட்டது; சகஜ நிலைக்கு திரும்புகிறோம்.கொரோனா தொற்றில் இருந்து, பாடம் படித்துள்ளோம். மாற்று வழி முறையை மறக்க முடியாது. அதனால், நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் இணைந்து செயல்படுத்தலாம்.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment