இனி சார், மேடம் கிடையாது! - பாலின பாகுபாட்டை களைய கேரளா பள்ளியில் புதிய யுக்தி - Daily Dhuniya

Breaking

Tuesday, January 11, 2022

இனி சார், மேடம் கிடையாது! - பாலின பாகுபாட்டை களைய கேரளா பள்ளியில் புதிய யுக்தி

கேரள பாலக்காடு மாவட்டம் ஒளச்சேரியில் அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 300 மாணவர்கள் பயிலும் இப்பள்ளியில் 8 ஆண் ஆசிரியர்களும், 9 பெண் ஆசிரியைகளும் பணியாற்றி வருகிறார்கள். இந்த பள்ளி நிர்வாகம் தற்போது மாணவர்களுக்கான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஆசிரியர்களை அழைப்பதில் பாலின சமத்துவத்தை கடைபிடிக்கும் வகையில் மாணவர்கள் இனி ‘சார்’ அல்லது ‘மேடம்’ என்று அழைக்காமல் பொதுவாக ‘டீச்சர்’ என்று மட்டும் அழைத்தால் போதும் என்று தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஆசிரியர்களிடம் பேசுவதில் பாலின சமன்பாட்டை கொண்டுவரும் மாநிலத்தின் முதல் பள்ளி என்ற பெருமையை ஒளச்சேரி அரசு உதவி பெறும் உயர்நிலை பள்ளி பெற்றுள்ளது.

இந்த யோசனையை அப்பள்ளியின் ஆசிரியர்களில் ஒருவரான சஜீவ் குமார் தெரிவித்ததாக கூறும் அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வேணுகோபாலன், இந்த மாற்றத்தை ஏன் கொண்டு வரக்கூடாது என்று நாங்கள் நினைத்தோம். அதனை அப்படியே செயல்படுத்தியுள்ளோம். டீச்சர் என அழைக்கும் வழக்கத்தை கொண்டு வந்ததற்கு பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றார். சமூக ஆர்வலர் பூபன் மட்டுமன்தாவின் பிரசாரத்தைப் பார்த்து சஜீவ் குமாருக்கு இந்த எண்ணம் தோன்றியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்கள் அவர்களின் பாலினத்தால் அல்ல, அவர்களின் பதவி மூலம் அறியப்பட வேண்டும். சார், மேடம் என்ற வார்த்தைகள் பாலின நீதிக்கு எதிரானது. முதலில் மாணவர்கள் தயக்கம் காட்டினாலும் தற்போது அனைவரும் அவ்வாறு அழைக்க பழக்கப்பட்டு விட்டனர் என்றும் தலைமை ஆசிரியர் வேணுகோபாலன் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளியில் இருந்து 14 கிலோ மீட்டர் தொலைவில் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாத்தூர் பஞ்சாயத்து உள்ளது. அந்த பஞ்சாயத்து அலுவலக அதிகாரிகளை சார் மேடம் என்று பொதுமக்கள் அழைக்க வேண்டிய அவசியமில்லை. அவர்களின் பதவியை சொல்லி அழைக்கும் வழக்கத்தை கடந்த ஜூலை மாதம் முதல் அப்பஞ்சாயத்து பின்பற்றி வருகிறது என்பது கவனிக்கத்தக்கது.

No comments:

Post a Comment