அரசுப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய இளநீர் விற்கும் பெண் - Daily Dhuniya

Breaking

Tuesday, January 11, 2022

அரசுப்பள்ளிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கிய இளநீர் விற்கும் பெண்

உடுமலை - திருப்பூர் சாலையில் உள்ள சின்னவீரம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் சுமார் 600 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். அங்கு போதிய இடவசதி இல்லாததால், ஓட்டுக்கட்டிடங்களை அகற்றி, ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் அடுக்குமாடி அறைகள் கொண்ட கட்டிடம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக தன்னார்வலர்கள் சிலர் நிதியுதவி அளித்து வருகின்றனர். இந்நிலையில் அதே ஊரில் இளநீர் வியாபாரம் செய்து வரும் தாயம்மாள் (45), தனது சேமிப்பில் இருந்து ரூ.1 லட்சத்துக்கான காசோலையை கட்டிட நிதிக்காக வழங்கி, அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துஉள்ளார். நேற்று பள்ளி தலைமையாசிரியர் இன்பக்கனியை சந்தித்து, காசோலையை வழங்கிய தாயம்மாளை, பள்ளி ஆசிரியர்களும், பெற்றோரும் பாராட்டினர்.

இதுகுறித்து தலைமையாசிரியர் இன்பக்கனி கூறும்போது, ‘‘சின்னவீரம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் நான்கு வகுப்பறை கட்டிடம் கட்டிக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பொதுமக்கள் தரப்பில் இருந்து ரூ.15 லட்சம் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. மேலும் 8 வகுப்பறைகள் கட்ட நிதி தேவைப்படுகிறது. இதையறிந்த தாயம்மாள், ரூ.1 லட்சத்தை நன்கொடையாக வழங்கியுள்ளார்’’ என்றார். தாயம்மாளின் கணவர் ஆறுமுகம் (எ) அய்யாவு கூலித் தொழிலாளி என்பது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment