உயா்கல்வி அமைப்புகளில் 7 ஆண்டுகளில் 122 மாணவா்கள் தற்கொலை - Daily Dhuniya

Breaking

Thursday, December 23, 2021

உயா்கல்வி அமைப்புகளில் 7 ஆண்டுகளில் 122 மாணவா்கள் தற்கொலை

மத்திய அரசின் உயா்கல்வி அமைப்புகளில் கடந்த ஏழு ஆண்டுகளில் 122 மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா் என மத்திய கல்வித் துறை அமைச்சா் தா்மேந்திர பிரதான் மக்களவையில் திங்கள்கிழமை தெரிவித்தாா். மாணவா்களுக்கு ஏற்படும் மன அழுத்தம், அவா்கள் மீதான துன்புறுத்தல் ஆகியவற்றைப் போக்குவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

மக்களவையில் நாமக்கல்தொகுதி உறுப்பினா் ஏ.கே.பி.சின்ராஜ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துப் பேசுகையில் அமைச்சா் தா்மேந்திர பிரதான் இதைத் தெரிவித்தாா். அவா் மேலும் கூறியதாவது: கடந்த 2014 முதல் 2021-ஆம் ஆண்டு வரை மொத்தம் 122 மாணவா்கள் உயா் கல்வி அமைப்புகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். இதில் அதிக அளவில் மத்திய பல்கலைக்கழகங்களில் 37 மாணவா்களும் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில்(ஐஐடி) 34 மாணவா்களும் தற்கொலை செய்துகொண்டுள்ளனா்.

இவற்றுக்கு அடுத்த நிலையில், தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில்(என்ஐடி) முப்பது மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். இந்திய மேலாண்மை நிறுவனங்களில் (ஐஐஎம்) 5 மாணவா்கள், இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் 4 மாணவா்கள், பெங்களூரு இந்திய விஞ்ஞான நிறுவனம் மற்றும் இந்திய அறிவியல் கல்வி ஆய்வு ஆகியவற்றில் மொத்தம் 9 மாணவா்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனா்

இந்த தற்கொலை செய்து கொண்ட மாணவா்கள் பட்டியலில், பட்டியல் இனப் பிரிவு, பழங்குடி, இதர பிற்படுத்தப்பட்டோா் ஆகிய பிரிவுகளைச் சோ்ந்தவா்கள் முறையே 24, 3, 41 என உள்ளது. மத்திய அரசும், பல்கலைக்கழக மானியக் குழுவும் மாணவா்களின் தற்கொலைகளைத் தடுக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துள்ளன. பல்கலைக்கழக மானியக் குழு, மாணவா்களின் நலன்களை பாதுகாக்க 2019 -ஆம் ஆண்டு மாணவா்களின் குறைதீா்ப்பு ஒழுங்குமுறைகளை உருவாக்கியுள்ளது. மேலும், மாணவா்களைத் துன்புறுத்தல் மற்றும் பாரபட்சமாக நடத்தும் சம்பவங்களைத் தடுக்கும் முயற்சிகளும் எடுக்கப்பட்டுள்ளன.

மேலும், கல்வி அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் தொழில்நுட்பக் கல்வியை பிராந்திய மொழிகளில் அறிமுகப்படுத்துதல், கற்றலில் மாணவா்களுக்கு உதவுதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இது தவிர, ஆளுமை வளா்ச்சி, ஆரோக்கியம் குறித்த கருத்தரங்குகள், யோகா, மனமகிழ்ச்சி, விளையாட்டு, கலாசார நடவடிக்கைகள் உள்ளிட்ட பாட நெறி நடவடிக்கைகள் மூலம் ஒட்டுமொத்த மன அழுத்தத்தை குறைக்க மாணவா்களுக்கு ஆலோசகா்களை அமைச்சகம் நியமனம் செய்துள்ளது என்றாா் அமைச்சா்.

No comments:

Post a Comment