ஆன்லைன் வகுப்புகள் போதும்: ஐ.ஐ.டி.,க்களை திறக்கக் கோரும் இளநிலை மாணவர்கள்! - Daily Dhuniya

Breaking

Friday, September 10, 2021

ஆன்லைன் வகுப்புகள் போதும்: ஐ.ஐ.டி.,க்களை திறக்கக் கோரும் இளநிலை மாணவர்கள்!

ஆன்லைன் வகுப்புகளில் பொறியியல் பாடங்களை கற்பது மிகவும் சிரமமாக இருப்பதாகவும், பள்ளிகளே திறந்துவிட்ட நிலையில் எங்களுக்கு ஏன் ஐ.ஐ.டி.,க்கள், என்.ஐ.டி.,க்களை திறக்கக்கூடாது என்று டுவிட்டரில் மாணவர்கள் கோரிக்கை வைக்கின்றனர். கோவிட் காரணமாக கடந்த 20 மாதங்களாக மாணவர்களின் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது இரண்டாம் அலை ஓய்ந்து ஓரளவு இயல்பு நிலை திரும்பி உள்ளது. 9 முதல் 12 வகுப்புகள் வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. கல்லூரிகளும் பல மாநிலங்களில் 50% மாணவர்களுடன் நடக்கின்றன. இந்நிலையில் இந்தியாவின் பிரீமியம் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி., என்.ஐ.டி.,க்களில் படிக்கும் இளநிலை பொறியியல் மாணவர்கள் தங்களது எதிர்க்காலம் குறித்து கவலை எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக டுவிட்டர் #Reopen_IIT_IIIT_NIT என்ற ஹாஷ்டேகை பயன்படுத்தி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டுவீட்களை பதிவிட்டுள்ளனர். கடந்த வாரமும் இதே கோரிக்கையை மாணவர்கள் முன் வைத்த நிலையில், அரசு நடவடிக்கை எடுக்காததால் மீண்டும் கல்லூரிகளை திறக்கும் படி கேட்டுள்ளனர். “பொறியியல் படிப்புகளுக்கு ஆன்லைன் பாடங்கள் போதுமானதாக இல்லை. அசைன்மென்ட் எழுதி காலக்கெடுவுக்கு சமர்பிப்பது பொறியியல் படிப்பு இல்லை. செய்முறை பயிற்சிகளே முக்கியம். அது இல்லாமல் பல மாதங்கள் ஓடிவிட்டது.” என ஒரு மாணவர் கூறியுள்ளார். “பல மாணவர்கள் இரு தடுப்பூசிகளையும் செலுத்தியுள்ளனர். நோய் முடிவுக்கு வர இருப்பதாக நிபுணர்களே கூறியிருக்கின்றனர். எங்கள் மீது கொஞ்சம் இரக்கம் காட்டி ஐ.ஐ.டி.,க்களை திறங்கள். ஜெ.இ.இ., நுழைவுத் தேர்வை ஆப்லைனில் நடத்திவிட்டு, கல்லூரிகளை ஆன்லைனில் நடத்துவது சரியல்ல.” என மற்றொரு மாணவர் பதிவிட்டுள்ளார். தற்போது தான் பல ஐ.ஐ.டி.,க்கள், என்.ஐ.டி.,க்கள் முதுநிலை மாணவர்கள், முனைவர் பட்ட மாணவர்கள், இறுதியாண்டு மாணவர்களுக்கான நேரடி வகுப்பை தொடங்கியுள்ளன. விரைவில் இளநிலை பொறியியல் மானவர்களுக்கும் நேரடி வகுப்புகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment