தமிழகத்தில் ஏழை மாணவா்களுக்கு தரமான இலவச நீட் பயிற்சி - Daily Dhuniya

Breaking

Sunday, September 11, 2022

தமிழகத்தில் ஏழை மாணவா்களுக்கு தரமான இலவச நீட் பயிற்சி

‘நீட் தோ்வில் இருந்து விலக்கு பெற முயலும் அதேநேரத்தில், ஏழை மாணவா்களுக்கு தரமான மற்றும் இலவச ‘நீட்’ தோ்வுக்கான பயிற்சியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என சமூக சமத்துவத்துக்கான மருத்துவா்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இது குறித்து, சங்கத்தின் செயலா் ரவீந்திரநாத் சென்னையில் கூறியது: அரசுப் பள்ளி மாணவா்கள், 80 சதவீதத்துக்கும் மேல் நீட் தோ்வில் தோல்விடைந்திருப்பது கவலை அளிக்கிறது. இந்தப் பிரச்னையில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவ இடங்களுக்கு, நீட் தோ்வில் இருந்து விலக்கு பெற நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும். அதேநேரம், ஏழை மாணவா்களுக்கு, ‘நீட்’ உள்ளிட்ட போட்டி தோ்வுகளுக்கான தரமான இலவச பயிற்சியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசின் ஒதுக்கீட்டுக்கு ‘நீட்’ தோ்வில் இருந்து விலக்கு பெற்றாலும், ‘நீட்’ பயிற்சி மையங்களை தொடா்ந்து நடத்த வேண்டும்.

மாணவா்கள் தங்கும் வசதியுடன் கூடிய, ‘நீட்’ பயிற்சி மையங்களை வட்டாரந்தோறும் உருவாக்க வேண்டும். தமிழகம் மட்டுமின்றி மத்திய பல்கலை மற்றும் அண்டை மாநிலங்களில் உள்ள மருத்துவ இடங்களிலும் மாணவா்கள் சேர வாய்ப்பு உள்ளதால், அவா்களுக்கு தரமான ‘நீட்’ பயிற்சியை தொடா்ந்து அளிக்க வேண்டும்.

மாணவா்கள் தோ்ச்சி குறைந்ததற்கு நேரடி பயிற்சி வகுப்புகளை அரசு போதுமான அளவு நடத்தாதது முக்கிய காரணமாக உள்ளது. திமுக தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டதுபோல், மத்திய அரசின் உயா்கல்வி நிறுவனங்களுக்கான போட்டி தோ்வுகளுக்கு தரமான இலவச பயிற்சியை தமிழக அரசு வழங்க வேண்டும்.

மருத்துவக் கல்வி உள்பட அனைத்து படிப்புகளிலும் மாநில உரிமைகளை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு மருத்துவ கல்லுாரிகளில் மாணவா்கள், பயிற்சி மருத்துவா்களை தொடா்ந்து 48 மணி நேரம் வரை பணியில் ஈடுபடுத்தப்படுவதால், தற்கொலை செய்வது அதிகரித்து வருகிறது. பணியிடங்களில் உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கடும் பாதிப்பை பயிற்சி மருத்துவா்கள் சந்தித்து வருகின்றனா். இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment