மாணவியருக்கு ஊக்கத்தொகை.. 2.75 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை..! - Daily Dhuniya

Breaking

Tuesday, August 23, 2022

மாணவியருக்கு ஊக்கத்தொகை.. 2.75 கோடி ரூபாய் ஒதுக்கி அரசாணை..!

கிராமப்புறங்களில் படிக்கும் சிறுபான்மை மாணவியர், இடைநிற்றல் இல்லாமல் தொடர்ந்து கல்வி கற்க, 3-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஊக்கத் தொகையாக ஆண்டுக்கு 500 ரூபாய்; 6-ம் வகுப்பு மாணவியருக்கு 1,000 ரூபாய் வழங்க சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் அரசுக்கு பரிந்துரை செய்தார்.

இதை பரிசீலனை செய்த அரசு, 'கிராமப்புற பள்ளிகளில் சிறுபான்மையின சமுதாய பெண் குழந்தைகள் கல்வி கற்க ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்' என்ற பெயரில், அனைத்து மாவட்டங்களிலும் செயல்படுத்த 2.75 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளுடன், அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: ‘கிராமப்புறப் பள்ளிகளில் 3-ம் வகுப்பு முதல் 6-ம் வகுப்பு வரை படிக்கும் பெண் குழந்தைகளுக்கான ஊக்கத்தொகை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் வழியாக வழங்கப்படும்.

அரசு, அரசு உதவிபெறும் மற்றும் பகுதியாக அரசு உதவி பெறும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும்

ஊக்கத்தொகை பெற, சிறுபான்மையினர் வகுப்பை சேர்ந்தவராக இருக்க வேண்டும். விதவை மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பெண் குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

மாணவியரின் பெற்றோர் வருமான வரம்பு, ஆண்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது’ என்று அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment