அடுத்தடுத்த புகார்களால், மாணவர்களை கண்டிக்க கூட முடியாத நிலையில், பணிபாதுகாப்பு இன்றி இருப்பதாக, ஆசிரியர்கள் பலர் புலம்பி வருகின்றனர்.சிறார்கள் மீது நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு, தண்டனைகளை கடுமையாக்கும் வகையில், 'போக்சோ' சட்டம் கொண்டு வரப்பட்டது.இச்சட்டம் அமலுக்கு வந்த பிறகு, அனைத்து பள்ளிகள், கல்வி அலுவலகங்களில், போக்சோ கமிட்டி அமைக்கவும் உத்தரவிடப்பட்டது. பள்ளி வளாகத்திற்குள், மாணவர்கள் பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்கு ஆட்படும் போது, புகார் அளிக்க வேண்டும்.பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு முறையாக கவுன்சிலிங், மருத்துவ உதவிகள் வழங்கி, அவர்கள் தொடர்ந்து படிக்க, வழிவகை செய்யப்படும்.இச்சட்டத்தில் கைது செய்யப்படுவோருக்கு, சிறை தண்டனை உறுதி செய்யப்படுவதோடு, துறை ரீதியாக கடுமையான தண்டனை பாயும். 'மாணவர் மனசு' என்ற புகார் பெட்டியிலும், இதுசார்ந்த புகார்களை மாணவர்கள் பதிவு செய்யலாம்.இச்சலுகையை சில மாணவர்கள் தவறாக பயன்படுத்துவதாக, புகார் எழுந்துள்ளது.
படிக்காத, கீழ்படிதல் இல்லாத மாணவர்களை கண்டித்தால், இவர்களால் ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு பறிபோவதாக கூறுகிறார், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில தணிக்கையாளர் அருளானந்தம்.அவர் கூறுகையில், ''மாணவர்களை கண்டித்தால், பெற்றோர், பொதுமக்கள் பள்ளிக்கு கூட்டமாக வந்து, ஆசிரியர்களை மிரட்டுகின்றனர்.
சில மாணவர்களும், ஆசிரியர்களை பழிவாங்குவதாக நினைத்து தவறாக புகார் அளிக்கின்றனர்.பாலியல் தொந்தரவு சார்ந்த புகார்கள் பதிவானால், விசாரணை கூட நடத்தாமல், உரிய ஆசிரியரை கைது செய்யும் நடவடிக்கை தொடர்கிறது.பதின்பருவ மாணவர்களுக்கு, வகுப்பு எடுக்கும் ஆசிரியர்கள், கண்டிக்கவும் முடியாமல், கண்டுகொள்ளாமல் இருக்கவும் முடியாமல், பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே, மருத்துவர்கள் போல ஆசிரியர்களுக்கும், பணிபாதுகாப்பு சட்டம் கொண்டுவர வேண்டும்,'' என்றார்.

No comments:
Post a Comment