தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50% சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை - Daily Dhuniya

Breaking

Monday, April 18, 2022

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50% சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50% சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50% சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனையைத் தொடக்கி வைத்து பார்வையிடுகிறார் துணைவேந்தர் வி. திருவள்ளுவன். தஞ்சாவூர்: தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 50 சதவீத சிறப்புத் தள்ளுபடி விலையில் நூல்கள் விற்பனை திங்கள்கிழமை தொடங்கியது.

இந்த விற்பனையைத் தொடக்கி வைத்த துணைவேந்தர் வி. திருவள்ளுவன் தெரிவித்தது: தமிழ்ப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மட்டுமன்றி தமிழ் உலகின் தலைசிறந்த ஆய்வறிஞர்களின் படைப்புகள், பழந்தமிழ் இலக்கியங்கள், அகராதி மற்றும் களஞ்சியங்கள் எனப் பலவகை நூல்களையும் ஆழமாக ஆய்வு செய்து, அவற்றை நூலாக வெளியிடும் அரும்பணியைத் இப்பல்கலைக்கழகப் பதிப்புத் துறை மேற்கொண்டு வருகிறது.

இப்பதிப்புத் துறையின் மூலம் இதுவரை 525 நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. பல்கலைக்கழக 12-ஆவது திட்ட நல்கை நிதியிலிருந்து 2021 ஆம் ஆண்டில் 16 புதிய நூல்கள் வெளியிடப்பட்டன. 2021 - 22 ஆம் ஆண்டில் 43 மறு பதிப்பு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆம் ஆண்டில் ரூ.13.57 லட்சத்துக்கு நூல்கள் விற்கப்பட்டன. நிகழாண்டு இதுவரை ரூ.2.94 லட்சம் மதிப்பில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்கள் மலிவு விலையில் அரிய நூல்களை வாங்கிப் பயன்பெறும் வகையில் தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளின்போது 50% சிறப்புக் கழிவு விலையில் நூல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

நிகழாண்டும் தமிழ்ப் புத்தாண்டையொட்டி, திங்கள்கிழமை முதல் மே 17-ஆம் தேதி வரை 30 நாள்களுக்கு 50% சிறப்புத் தள்ளுபடியில் நூல்கள் விற்பனை நடைபெறுகிறது.

இதை மாணவர்கள், ஆய்வாளர்கள், தமிழறிஞர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 9489102276 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றார் துணைவேந்தர்.

No comments:

Post a Comment