ஆவணப் பதிவின் போது மூத்த குடிமக்களுக்கு (70 வயதை கடந்தோர்) முன்னுரிமை - வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு - Daily Dhuniya

Breaking

Friday, December 24, 2021

ஆவணப் பதிவின் போது மூத்த குடிமக்களுக்கு (70 வயதை கடந்தோர்) முன்னுரிமை - வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என தமிழ்நாடு அரசு அறிவிப்பு

மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் திரு. பி.மூர்த்தி அவர்களின் அறிவிப்பு

பதிவுத்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காக அத்துறையில் பல சீர்திருத்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பதிவுத்துறையின் தலையாய குறிக்கோள் "குறித்த நேரத்தில் வரிசைக்கிரமமாக பாகுபாடற்ற சேவைகளை வெளிப்படையாக பொதுமக்களுக்கு வழங்குவது" ஆகும். ஸ்டார் 2.0 மென்பொருளில் தற்போது எந்தவிதமான பாகுபாடுமின்றி முன்பதிவு செய்த வரிசையில் வரிசைக்கிரமமாக ஆவணப்பதிவு நடைபெற்று வருகிறது. இவ்வாறு வரிசைக்கிரமமாக ஆவணங்கள் பதிவு செய்யப்படும்போது மூத்த குடிமக்கள் சார்பதிவாளர் அலுவலகத்தில் காத்திருக்கும் நிலை உள்ளது. மூத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு இனி வரும் காலத்தில் எழுதிக்கொடுப்பவர் அல்லது எழுதி வாங்குபவரில் யாரேனும் ஒருவர் எழுபது (70) வயதைக் கடந்தவராக இருக்கும் பட்சத்தில் அவர்கள் தங்களின் வரிசை எண்ணுக்காக காத்திருக்காமல் அலுவலகம் வந்தவுடன் உடனடியாக பதிவு செய்யும் வண்ணம் மென்பொருளில் உரிய மாற்றங்கள் செய்யப்படும். ஆதார் அடையாள அட்டை அல்லது உரிய அடையாள அட்டையின் உதவியுடன் வயது சரிபார்க்கப்படும். இனிவரும் காலத்தில் எழுபது வயது நிறைந்த மூத்த குடிமக்கள் பதிவு நாளன்று எந்த வரிசையில் டோக்கன் பதிவு செய்திருந்தாலும் அவர்கள் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு வந்த உடனேயே அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து உடனடியாக ஆவணம் பதிவு செய்யப்படும். இந்த அறிவிப்பு எதிர்வரும் 01.01.2022 முதல் நடைமுறைக்கு வரும் என மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் அறிவிக்கிறார்.

No comments:

Post a Comment