ஊக்க ஊதிய அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல் - Daily Dhuniya

Breaking

Sunday, November 7, 2021

ஊக்க ஊதிய அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தல்

மத்திய அரசு வழிகாட்டுதல்படி வெளியிடப்பட்டுள்ள ஊக்க ஊதிய அரசாணையை ரத்து செய்ய வேண்டுமென தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் சங்க பொதுச்செயலாளர் ஜான் வெஸ்லி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:

ஆசிரியர்கள் மேற்படிப்பு முடித்தால் வழங்கப்பட்டு வந்த ஊக்கஊதிய உயர்வு கடந்த ஆட்சியில்ரத்து செய்யப்பட்டது. சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குறுதியில் அண்ணாவால் வழங்கப்பட்ட ஊக்கஊதிய உயர்வு மீண்டும் வழங்கப்படும் என அறிவித்து, கடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் மத்திய அரசு அறிவித்த ஊக்க ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்து பழைய நடைமுறையைப் பின்பற்றி ஊக்க ஊதிய வழங்க வேண்டுமென கோரி 18.09.2021 அன்று கல்வி அமைச்சர் தலைமையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது ஊக்கஊதியத்துக்கு வரையறுக்கப்பட்ட ஒரு தொகை வழங்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டது, ஆசிரியர்கள் மற்றும் அரசுஊழியர்கள் மத்தியில் அதிருப்தியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதே போல் பணி நியமனத்துக்கு முன் பெற்ற உயர்கல்விக்கு ஊக்க ஊதியம் இல்லை என்றும், பணிபுரியும்போது பதவி உயர்வுக்கு ஏற்ற வகையில் உள்ள பாடங்களை படித்தால் மட்டுமே ஊக்க ஊதியம் உண்டு என்ற அறிவிப்பும் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.

இதனால் ஆசிரியர்கள் பணியில் சேர்ந்த பின் தங்களின் கல்வி மற்றும் அறிவுசார் நிலையை உயர்த்திக் கொள்ள, உயர் கல்வி பயில வேண்டும் என்ற எண்ணமே தோன்றாத சூழ்நிலை உருவாகிவிடும். எனவே தமிழக அரசு, மத்திய அரசு வழிகாட்டுதல்படி வெளியிட்டுள்ள அரசாணையை முழுவதும் ரத்து செய்ய வேண்டுமென தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் சங்கம் சார்பாக கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment