கரோனாவால் இந்திய கல்வியில் மேலும் ஏற்றத்தாழ்வு : யுனெஸ்கோ ஆய்வு - Daily Dhuniya

Breaking

Wednesday, October 6, 2021

கரோனாவால் இந்திய கல்வியில் மேலும் ஏற்றத்தாழ்வு : யுனெஸ்கோ ஆய்வு

"இந்திய கல்வி முறையில் கரோனா தொற்று மிக மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.

ஸ்மார்ட் போன்கள் மற்று இணைய பயன்பாட்டில் கிராமப்புற மாணவர்கள் பெருமளவு பின்தங்கியுள்ளதால், கல்வியை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.

யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கரோனாவால் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால், இந்தியாவில் 24.8 கோடி மாணவர்கள் நேரடியாக கல்வி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 70 சதவிகிதம் மாணவர்கள் ஸ்மார்ட் போன்கள், இணையவசதி போன்ற கல்வி பெறத் தேவையான சாதனங்களின் பயன்பாட்டில் பின்தங்கியுள்ளனர். இந்தியாவின் பல கிராமங்களில் இணைய தொலைத்தொடர்பு வசதியும் இல்லை.

நாட்டில் 40 சதவிகிதம் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இணைய வசதியை ஏற்படுத்தித் தர முடியாத பின்தங்கிய சூழலில் உள்ளனர். இதனால் கல்வியை சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்கும் வகையில் விரிவுபடுத்த வேண்டியது அவசியமாக உள்ளது. குறிப்பாக அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தரமான கல்விக்காக நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கின்றனர். ஆனால் அவர்களால் தற்போது கல்விக் கட்டணம் கட்ட இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

பொதுமுடக்கத்தால் வேலையிழந்த பலர் கிராமங்களுக்கு படையெடுத்துச் சென்றதாலும் பொருளாதார சிக்கலை சந்தித்துள்ளனர். இதனால் அவர்களது குழந்தைகளும் முழுமையான கல்வியை பெறுவதில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது."

No comments:

Post a Comment