அகவிலைப்படி கோரிக்கை:
கொரோனா தொற்றின் தாக்கத்தின் காரணமாக இந்திய பொருளாதார நிலை பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜனவரி 1, ஜூலை 1 மற்றும் இந்த ஆண்டின் ஜனவரி 1 ஆகிய நாட்களிலிருந்து அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 3 அகவிலைப்படியை மத்திய அரசு நிறுத்தி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூலை மாதம் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என கூறப்பட்டிருந்த நிலையில் தமிழக அரசும் அகவிலைப்படியை நிறுத்தியது. ஜூலை 27ம் தேதி மத்திய நிதி அமைச்சகத்தின் ஆணையின் படி, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி வழங்க அரசு ஆணையிட்டது. இதனை தொடர்ந்து உத்தரப் பிரதேசம், ஜம்மு – காஷ்மீர், ராஜஸ்தான், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்த ஆணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் நிதி, வருவாய் பற்றாக்குறை கடன் என பட்டியலிட்டு நிதி அமைச்சர் வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் நியாயமாக வழங்க வேண்டிய அகவிலைப்படி வழங்கப்படாதோ? என்னும் அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி அறிவித்து 20 நாட்கள் முடிந்த நிலையில் அவர்களுக்கான அகவிலைப்படியை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூறி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய அரசின் அறிவிப்புக்கு இணங்க தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படியை 17 விழுக்காட்டிலிருந்து 28 விழுக்காடாக உயர்த்தி உடனடியாக வழங்குவதற்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தமிழக முதல்வருக்கு கோரிக்கை வைத்துள்ளார்.
No comments:
Post a Comment