இந்து சமய அறநிலைய துறையில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை. - Daily Dhuniya

Breaking

Monday, June 28, 2021

இந்து சமய அறநிலைய துறையில் பணிபுரிந்து வரும் தொகுப்பூதிய பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை.

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர், தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு. எடப்பாடி K. பழனிசாமி அவர்களின் அறிக்கை
இந்து சமய அறநிலையத் துறையின்கீழ் உள்ள திருக்கோயில்களில் பணியாற்றும் தினக்கூலி மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களை நிரந்தரமாக்குக!
தமிழகத்தில் பொன்மனச் செம்மல் மாண்புமிகு புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். மற்றும் இதய தெய்வம் மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆட்சிக் காலங்களிலும், மாண்புமிகு அம்மாவுக்குப் பின் அம்மாவின் அரசிலும், தெய்வீகம், ஆன்மீகம், திருக்கோவில்கள் மற்றும் அதன் பணியாளர்கள் மேன்மை போற்றி பாதுகாக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளில் மாண்புமிகு அம்மா ஆட்சியில், தனிநபர் பெயரில் தவறாக பட்டா மாற்றம் செய்யப்பட்ட 1,224 திருக்கோயில்களுக்குச் சொந்தமான சுமார் 8,150 ஏக்கர் நிலங்கள் மீண்டும் திருக்கோயில்களின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது. ஆக்கிரமிப்பில் இருந்த சுமார் 3,175 ஏக்கர் நிலம், சுமார் 612 கிரவுண்டு மனைகள் மற்றும் கட்டிடங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டன. அவற்றின் மதிப்பு சுமார் 3,700 கோடி ரூபாய் ஆகும்.

1. ஆக்கிரமிக்கப்பட்டுள்ள திருக்கோவில் சொத்துக்களை மீட்போம்; திருக்கோவில் பணியாளர்களை பாதுகாப்போம் என்று வாயால் சொல்லும் ஆட்சியாளர்கள், ஆக்கிரமிப்பில் உள்ள இடங்களை ஆக்கிரமிப்பாளர்களுக்கே கொடுக்க உள்ளதாக செய்திகள் வருகின்றன. இதனால், திருக்கோயில்களுக்கு தொடர்ந்து இழப்பு ஏற்படும். எனவே, அறநிலையத் துறை சட்டவிதிகளின்படி திருக்கோயில்களுக்கு வாடகை பாக்கி நிலுவை வைக்காதவர்கள் தொடர்ந்து அச்சொத்துக்களில் வாடகைக்கு அனுமதிக்கவும், இதர ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டறிந்து, அச்சொத்துக்களை அறநிலையத் துறை விதிகளின்படி ஏலம் விட்டு திருக்கோயில்களுக்கு வருமானத்தை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ் நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.

2. நான் முதலமைச்சராக இருந்தபோது, தற்காலிகமாகப் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்கள் தங்களை நிரந்தரப் பணியாளர்களாக மாற்ற கோரிக்கை வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக 24.3.2020 அன்று 110 விதியின் கீழ் 31.7.2019 வரை 5 ஆண்டுகள் தொடர்ந்து பணிபுரிந்துவரும் சுமார் 2000 தினக் கூலிகள் மற்றும் தொகுப்பூதியப் பணியாளர்களின் பணியினை தகுதியின் அடிப்படையிலும், காலிப் பணியிடங்களை கணக்கில் கொண்டும் காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்யப்படும் என்று அறிவித்தேன். மேலும், மாநிலம் முழுவதும் தினக் கூலி அடிப்படையில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்களின் பட்டியலை தயாரித்து அரசுக்கு அனுப்புமாறு அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத் துறை ஆணையாளர் அவர்கள், சென்ற ஆண்டு ஆகஸ்டு மாதம் தமிழ் நாடு முழுவதும் உள்ள திருக்கோவில்களில் பணிபுரியும் தற்காலிகப் பணியாளர்கள் அதாவது, திருக்கோயில்களில் பணிபுரியும் தற்காலிக அர்ச்சகர்கள், பணியாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள், அன்னதானக் கூடங்களில் பணியாற்றும் சமையலர்கள், இதர தினக் கூலிப் பணியாளர்கள் என்று சுமார் 40,000 தற்காலிகப் பணியாளர்களின் விவரங்களை தயார் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார். ஆனால், கொரோனா நோய்த் தொற்று மற்றும் தமிழகத்தில் சட்டமன்றப் பொதுத் தேர்தல் ஆகியவற்றின் காரணமாக இத்தகவல் தயாரிக்கும் பணி நிறைவடையவில்லை. இதனால், தற்காலிகப் பணியாளர்களின் கோரிக்கைகள் மீது முடிவெடுக்க முடியவில்லை.

அறநிலையத் துறை ஆணையாளர் அவர்கள் தற்போது திருக்கோயில்களில் பணிபுரியும் சுமார் 40 ஆயிரம் தொகுப்பூதியப் பணியாளர்களை விடுவிக்க உத்தரவிட்டுள்ளார். இதனால், தொகுப்பூதிய அடிப்படையில் பணியாற்றும் சுமார் 40 ஆயிரத்திற்கும் அதிகமான தற்காலிகப் பணியாளர்கள் வேலை இழக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இவர்களது குடும்பங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குரியதாகி உள்ளது. எனவே, இந்த தேவையற்ற முடிவினை கைவிட்டு, நான் ஏற்கனவே சட்டமன்றத்தில் அறிவித்தவாறு குறைந்த சம்பளத்தில் நீண்ட காலமாக தினக் கூலி மற்றும் தொகுப்பூதியத்தில் பணிபுரியும் திருக்கோயில் பணியாளர்களை, பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தமிழ் நாடு அரசை கேட்டுக் கொள்கிறேன்.

No comments:

Post a Comment