திருக்குறள் :
ஏதிலார் குற்றம் போல் தங்குற்றங் காண்கிற்பின்
தீதுண்டோ மண்ணும் உயிர்க்கு.
பொருள் :
பிறர் குற்றம் காண்பவர்கள் தன் குற்றத்தையும் உணர்வார்கள் என்றால் புறம்கூறும் பழக்கமும் போகும் வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்
பழமொழி :
Anger is a short madness
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டு
இரண்டொழுக்க பண்புகள் :
1. உங்களை அழகாக்குவது
உங்களின் புன்னகை. புன்னகையுடன் இந்நாளை எதிர் கொள்ளுங்கள்.
2. உங்கள் அன்பு உள்ளங்களை வெல்லும் அனைவரிடமும் நேசத்துடன் பழகுங்கள்.
பொன்மொழி :
நாளைக்கு தள்ளி போடும் வேலைகளை மட்டும் தள்ளிப் போடுங்கள் இன்றைக்கு செய்ய வேண்டிய வேலைகளை இன்றே செய்து முடியுங்கள்.------ சுவாமி விவேகானந்தர்
பொது அறிவு :
1. நதிகள் இல்லா நாடு எது?
சவுதி அரேபியா.
2. 1000 ஏரிகள் கொண்ட நாடு எது?
பின்லாந்து
English words & meanings :
Slacker - a person who avoids work, வேலை செய்ய விருப்பம் இல்லாதவர்,
Zillionaire - extremely rich person, மிக அதிக பணக்காரர்
ஆரோக்ய வாழ்வு :
நெல்லிக்காய்
நெல்லியில் கருநெல்லி, அருநெல்லி என இருவகைகள் உண்டு. தமிழகத்திலும், வட மாநிலங்களிலும் அதிகமாக வளர்கிறது. நெல்லிக்கனியை உண்டு தண்ணீரைக் குடித்தால் அது எப்பேர்பட்ட தண்ணீராக இருந்தாலும் இனிக்கும். இதன் காரணமாகவே கிராமங்களில் கிணற்றுத் தண்ணீர் ருசியாக இல்லாவிட்டால், நெல்லி மரக்கிளையை வெட்டி கிணற்றில் போட்டு விடுவார்கள்.
கண்ணுக்குச் சிறந்த மருந்து இது. கண் சிவந்து புண்ணாகுதல் முதலிய வியாதிகளை குணப்படுத்தும்.அழகு சாதனப் பொருள்கள் தயாரிப்பதிலும் நெல்லிக் காய்க்கு பிரதான இடம் உண்டு. நெல்லியின் உள்ளிருக்கும் கொட்டைகளை நன்கு பொடி செய்து அதை தேங்காய் எண்ணெயில் கலந்து, நன்றாக கொதிக்க வைத்து, பின் குளிர வைத்து தலைக்குத் தடவி வந்தாலும், தலை பளபளப்பாகவும் கருமையாகவும், அடர்த்தியாகவும் இருக்க உதவும். தரமான தலை சாயங்களில் நெல்லி விதையைத்தான் பயன்படுத்துகிறார்கள்.
முதுமையை தடுக்கும் குணம் நெல்லிக்கனிக்கு உண்டு என்பதை சித்தர்கள் முதல் பாமரர் வரை அறிவார்கள். ஆனால் நவீன ஆராய்ச்சி மூலம் இதை உண்மை என உரைத்திருக்கின்றனர். நெல்லிக்காயில் 8.75 மில்லி கிராம் வைட்டமின் சி உள்ளது. தாதுப்புக்களும், இரும்பு சத்தும் நிறைந்துக் காணப்படுகிறது.
ஆரஞ்சு பழத்தை விட நெல்லிக்கனியில் 20 மடங்கு வைட்டமின் சி சத்து நிறைந்துள்ளது. ஆப்பிளை விட 3 மடங்கு புரதச்சத்து நெல்லியில் உள்ளது. அஸ்கார்பிக் அமிலம் என்னும் உயிர்ச்சத்து 160 மடங்கு நெல்லிக்கனியில் உள்ளது. நெல்லிவற்றல், பச்சைபயறு வகைக்கு 20 கிராம் எடுத்து 1 லிட்டர் நீர்விட்டு 200 மி.லி.ராக காய்ச்சி வடித்து, 100 மி.லி என காலையும் மாலையும் அருந்தி வந்தால் தலைச்சுற்றல் கிறுகிறுப்புடன் கூடிய இரத்தக்கொதிப்பு நீங்கும்.
கணினி யுகம் :
Windows key + L - Lock.
Windows key + X - Power user tasks menu
நவம்பர் 11
தேசிய கல்வி நாள்
தேசிய கல்வி நாள் (National Education Day) இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 11 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சராக விளங்கிய மௌலானா அபுல் கலாம் ஆசாத்தின் பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக இத்தினம் கொண்டாடப்படுகிறது. 15 ஆகத்து 1947 முதல் 2 பிப்ரவரி 1958 வரை இவர் கல்வி அமைச்சாராகப் பணியாற்றினார்.[
மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது அவர்களின் பிறந்தநாள்...
மௌலானா அபுல் கலாம் முகியுத்தின் அகமது (11 நவம்பர் 1888 – 22 பெப்ரவரி 1958) இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த அரசியல் தலைவரும் இந்திய முசுலிம் அறிஞரும் ஆவார். சமய அடிப்படையிலான இந்தியப் பிரிவினையை எதிர்த்து இந்து- முசுலிம் ஒற்றுமையை வலியுறுத்திய முசுலிம் தலைவர்களில் முதன்மையானவர். இந்தியா விடுதலையடைந்த பிறகு அமைந்த முதல் இந்திய அரசில் கல்வி அமைச்சராகப் பணியாற்றியவர். பாக்கித்தான் பிரிவினையையும் அங்கு இராணுவ ஆட்சி ஏற்படப்போவதையும் முன்னரே தெரிவித்த பெருமை உடையவர்.பரவலாக இவர் மௌலானா ஆசாத்என அறியப்படுகிறார்; ஆசாத் (விடுதலை) என்பது இவர் வைத்துக்கொண்ட புனைப்பெயராகும்.
கி. ஆ. பெ. விசுவநாதம் அவர்களின் பிறந்தநாள்...
கி. ஆ. பெ. விசுவநாதம் (நவம்பர் 10, 1899 - டிசம்பர் 19, 1994) பரவலாக முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ, தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார். நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காகவும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர். இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு பரிவுத் தொகை 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.
நீதிக்கதை
ஏமாந்த சிறுத்தை
ஒரு நாள் சிறுத்தை பசியுடன் உணவைத் தேடியது. அப்போது ஒரு கறுப்பு மானையும் புள்ளி மானையும் கண்டது.
அவை இரண்டும் மலையடிவாரத்தில் மேய்ந்து கொண்டிருந்தன. சிறுத்தை மிகுந்த எச்சரிக்கையுடன் மலையடிவாரத்தருகே சென்றது. ஆனால் எதனைத் தாக்குவது என அது முடிவு செய்யவில்லை.
அதே நேரத்தில் சிறுத்தையைப் பார்த்த மான்கள் இரண்டும் வேகமாக ஓடின. பிறகு அவை இரண்டும் ஒரு இடத்தில் இடது வலது பாதைகளில் ஓடின.
சிறுத்தை அந்த இடத்துக்கு வந்தது. ‘எதைத் துரத்தலாம்’ என்று தயங்கி நின்றது. பிறகு, ‘சரி.. கறுப்பு மானைத் துரத்தலாம். அதன் இறைச்சிதான் சுவையாக இருக்கும்’ என்று முடிவு செய்து கறுப்பு மானைத் துரத்தத் தொடங்கியது. ஆனால் அதற்குள் அது தொலைதூரம் ஓடிப் போய் விட்டது.
உடனே சிறுத்தை “அது வேகமாக ஓடக் கூடிய மான். அதைப் பிடிக்க முடியாது. பசி வேறு அதிகமாகி விட்டது. சரி… புள்ளி மானைப் பிடிக்கலாம்” என்று தீர்மானித்து மற்ற பாதையில் ஓடியது. ஆனால் புள்ளிமான் எப்போதோ பஞ்சாய்ப் பறந்துவிட்டிருந்தது.
நீதி:
முக்கியமான நேரத்தில் முக்கியமான் முடிவை விரைவாக எடுக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
11.11.21
★குரூப் 4 தேர்வு முறைகேட்டில்; டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுக்கு தொடர்பில்லை: உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தகவல்.
★கோவை- மதுரை முன்பதிவில்லா எக்ஸ்பிரஸ் ரயில் சேவை தொடக்கம்.
★தமிழகத்தில் கனமழை; ஒரு லட்சம் ஏக்கர் நெற்பயிர் மழைநீரில் மூழ்கின: டெல்டா விவசாயிகள் வேதனை.
★3, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களின் திறன்களை மதிப்பிடு செய்யும் தேசிய சாதனை கணக்கெடுப்பு (என்ஏஎஸ்) நாடு முழுவதும் 2021 நவம்பர் 12-ம் தேதி நடைபெறவுள்ளது.
★நாட்டின் பல்வேறு பல்கலைகழகங்களில் சமூகரீதியிலானப் புகார்கள் அதிகரித்து வருகின்றன. இதன் மீதான நடவடிக்கைகளில் மத்திய அரசின் பல்கலைகழக மானியக் குழு(யுஜிசி) அலட்சியம் காட்டுவதாகப் புகார் எழுந்துள்ளது.
★ஹாங்காங் அரசு தங்களுடைய அங்கீகரி்க்கப்பட்ட தடுப்பூசிப் பட்டியலில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
★டாப்-8 வீராங்கனைகள் பங்கேற்கும் உலக பெண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நேற்று தொடங்கியது.
★பிரேசில் பெண்கள் கால்பந்து அணியின் நட்சத்திர வீராங்கனை பார்மிகா இந்தியாவுக்கு எதிரான போட்டியுடன் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
No comments:
Post a Comment